கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!

புதிதாக வீடு கட்டும் போது அதன் வடிவமைப்பு, கட்டு மானம் பெரும்பாலும் அறிவியல் பூர்வ வழி முறைகளிலேயே இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆனால், சில சமயங்களில் நம்பிக்கைகள் அடிப்படையில் கட்டுமான பணிகளில் சில வழிமுறைகள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

வீட்டுக்கான கட்டுமான பணியில் எந்த அறை எங்கு அமைய வேண்டும், அதன் நீள அகலம் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நம்பிக்கைகள் அடிப்படையில் முடிவு செய்யப்படுகின்றன. வாஸ்து என்றும் வேறு பெயர்களிலும் இது குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய சூழலில் ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், கட்டடத்தின் தரம் போன்ற விஷயங்களுக்கு அப்பால் வாஸ்து தொடர்பான விஷயங்களை கவனித்தீர்களா என்பது முக்கிய கேள்வியாக எழுகிறது. இதனால், கட்டட வடிவமைப்பாளர்களும் வாஸ்து அம்சங்களை கருத்தில் வைத்து வடிவமைப்புகளை பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாஸ்து என்ற அடிப்படையில் கூறப்படும் கருத்துகள் அறிவியல் பூர்வமானவையா என்பதில் பலருக்கும் பல்வேறு கேள்விகள் இருக்கலாம். ஆனால், ஒருவரின் நம்பிக்கைகள் என்ற அடிப்படையில் இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

உங்கள் வீட்டுக்கான வடிவமைப்பின் போது வாஸ்து அடிப்படையில் சில விஷயங்களை முடிவு செய்வதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் எதார்த்த நிலையில் இயல்பாக பயன்படுத்துவதற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீடுகளில் வரவேற்பு அறை என்பது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் அமைய வேண்டும் என்று வாஸ்து வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். இயல்பான நிலையில் அறிவியல் அடிப்படையில் பார்த்தால் காலை நேர சூரிய ஒளி இந்த இடத்தில் விழும் என்ற நோக்கில் இந்த பரிந்துரை தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வீட்டில் அனைவரும், அதிகமாக பயன்படுத்தும் அறையில் காலை நேர சூரிய ஒளி கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்தால் அது அங்கு வசிப்போரின் ஆரோக்கியத்துக்கு உதவும். இந்த அடிப்படையில் வரவேற்பு அறை அமையும் இடத்தை முடிவு செய்வதில் எந்த தவறும் இல்லை.

அதே போன்று ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் படுக்கை அறை இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பகல், 12:00 மணி முதல் மாலை வரையிலான கடுமையான சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்புள்ளதாக இதற்கு காரணம் கூறப்படுகிறது.

இது போன்ற விஷயங் கள் சூரிய ஒளி எப்போது, எங்கு, எப்படி விழும் என்பதன் அடிப்படையில் சில பரிந்துரைகள் தெரிவிக்கப்படுகின்றன. வாஸ்து என்ற பெயரில் இது கூறப்பட்டாலும், அறிவியல் பூர்வ நோக்கமும் இதற்குள் வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் உங்களுக்கு எவ்வித புரிதலையும் கொடுக்காமல் வெறும் கட்டளையாக பிறப்பிக்கப்படும் பரிந்துரைகளை கடைப்பிடிப்பது சரியா என்பதை உரிமையாளர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதே நேரம் உங்கள் நம்பிக்கையை யாரோ ஒருவர் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

சூரிய ஒளி எப்போது எங்கு எப்படி விழும் என்பதன் அடிப்படையில் சில பரிந்துரைகள், வாஸ்து என்ற பெயரில் கூறப்பட்டாலும், அறிவியல் பூர்வ நோக்கமும் இதற்குள் வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement