வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்

அந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள ஊஞ்சக்காட்டை சேர்ந்த குருசாமி மகன் கலைச்செல்வன், 27; நசியனுாரில் ஒரு கார் ஷோரூமில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்தார். பைக்கில் கடந்த, 19ம் தேதி வீட்டிலிருந்து அந்தியூர் சென்றார். புதுமாரியம்மன் கோவில் அருகில் சென்றபோது, முன்னால் பைக்கில் சென்றவர் திடீரென வலதுபுறம் திரும்பினார். இதனால் முன்னால் சென்ற பைக்கில் மோதினார். இதில் கலைச்செல்வன் பின்னந்தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர் சம்மதத்தின் பேரில், அவரது உடலுறுப்புகள் நேற்று தானம் செய்யப்பட்டது.


சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் கல்லீரல், ஈரோடு மற்றும் கோவை தனியார் மருத்துவமனைக்கு தரப்பட்டது. இதனால் ஆறு பேர் மறுவாழ்வு பெறவுள்ளனர். சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட கலைச்செல்வன் உடலுக்கு, அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement