இன்று பலத்த காற்றுடன் மழை; கத்திரி வெயில் நாளை நிறைவு

2

சென்னை: 'தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் பகுதியில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காணப்படும் சில மாற்றங்கள் காரணமாக, நேற்று தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஓரிரு நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மே 30 வரை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோடை வெயிலின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம், நாளையுடன் நிறைவடைய உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல், மே 30 வரை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்:



இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரியில், நேற்று மாலை நிலவரப்படி, 10 இடங்களில் வெயில் சதமடித்தது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணி, வேலுாரில், தலா, 106 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 41.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

Advertisement