மூளையை உறைய செய்து மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?
சீனாவின் புடான் பல்கலை விஞ்ஞானிகள், உயிருள்ள மூளை திசுக்களை உறைய வைத்து, பின்னர் வெற்றிகரமாக உயிர்ப்பிக்கும் புதிய உறைநிலை பாதுகாப்பு (Cryopreservation) தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர்.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த 'மூளை ஆர்கனாய்டுகள்' எனப்படும் மனித மூளையின் சிறிய மாதிரிகளை, 'மெடி' (MEDY) என்ற உயிரி வேதி கலவையை பயன்படுத்தி, 18 மாதங்கள் வரை அவர்கள் பாதுகாத்தனர். பின்னர் அதை மீண்டும் உறைநிலையிலிருந்து மீட்ட போது, மூளை திசுக்களின் உயிரணு அமைப்பும், நரம்பியல் செயல்பாடுகளும் அதிகம் பாதிக்கப்படாமல் இருந்தன.
பாரம்பரிய உறைவித்தல் முறைகளில் பனி படிகங்கள் உருவாகிவிடும். மேலும், வேதிவினைகளும் ஏற்படும். இதனால், மூளை திசுவில் உள்ள நுட்பமான நரம்பு இணைப்புகள் முற்றிலும் அழிந்துவிடும். ஆனால், இந்த புதிய அணுகுமுறை, நியூரான் எனப்படும் நரம்பணுக்களையும், அவற்றுக்கு ஆதரவான செல்களையும் திறம்பட பாதுகாக்கிறது.
இதன் வாயிலாக, உறைநிலை நீக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தங்களின் இயல்பான வளர்ச்சியையும், நரம்பு சமிக்ஞைகளையும் தொடர முடிகிறது. மனித மூளை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களை பிரதிபலிக்கும் மாதிரிகளில் இச்சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
'செல் ரிப்போர்ட்ஸ் மெத்தட்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ள இக்கண்டுபிடிப்பு, நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் புதிய மருந்து சோதனைகளுக்காக, மூளை திசுக்களை நீண்ட காலம் சேமித்து வைக்கும் முறையை மேம்படுத்தும்.
ஒட்டுமொத்த மனித மூளையையும் உறைய வைத்து மீட்டெடுப்பது என்பது இப்போதும் அறிவியல் சவாலாகவே உள்ளது.
இருந்தாலும், சிக்கலான உயிருள்ள திசுக்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதில், இந்த ஆய்வு ஒரு மிக முக்கியமான அடுத்த கட்டமாகும். எதிர்காலத்தில் நரம்பியல் சார்ந்த நோய்களுக்கான மருந்து கண்டு பிடிப்புகளை இத்தொழில் நுட்பம் வேகப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மூளையின் செயல்பாடுகளை, அதன் அசல் தன்மையோடு நீண்ட காலம் ஆய்வகத்தில் சேமிக்க முடிவது, மருத்துவ உலகிற்கு புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளது.
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு