திராவிட ஆட்சிகளில் சாதனை!

42


கோவை: பள்ளி பொதுத்தேர்வுகளில் ஆங்கிலத்தை விட தமிழ் பாடத்தில் அதிகளவு மாணவர்கள் தோல்வியடைவது தொடர்கிறது.தொடக்கக்கல்வி நிலையிலேயே மொழித்திறன், எழுத்துப்பயிற்சி மற்றும் வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுத்தேர்வுகளில் தாய்மொழியான தமிழில் தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆங்கிலப் பாடத்தை விட அதிகமாக இருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஆங்கிலத்தை விட மூன்று மடங்கு மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் பாடத்தில் உள்ள ஆழமான இலக்கணம், செய்யுள், மனப்பாடப் பகுதிகள், கடினமான வினாத்தாள் மற்றும் மதிப்பீட்டு முறை போன்றவை தேர்ச்சி விகிதம் குறைவதற்கான காரணங்களாக பொதுவாகக் கூறப்படுகின்றன. ஆனால், மாணவர்களிடம் அடிப்படை மொழித்திறன் குறைவாக இருப்பதே அதிகளவிலான தோல்விகளுக்கு முக்கிய காரணமாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் கோதை கூறியதாவது:ஆரம்பக் கல்வியிலிருந்தே தமிழை முறையாக எழுதவும், வாசிக்கவும் பழகாமல், 'ஆல் - பாஸ்' முறையில் உயர் வகுப்பு களுக்கு மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். ஒற்றை கொம்பு, இரட்டைக்கொம்பு, துணைக்கால் போன்றவை எந்தெந்த இடங்களில் வரும். ல-ள-ழ, ர-ற, மற்றும் ன-ண-ந போன்ற எழுத்து வேறுபாடுகள் கூட பல மாணவர்களுக்கு தெரிவதில்லை.

இதுபோன்ற அடிப்படை மொழித்திறன் குறைவால் மாணவர்கள் அதிகமான எழுத்துப்பிழைகள் செய்கின்றனர். இதனால், பொதுத்தேர்வுகளில் பெருமளவு மதிப்பெண்களை இழக்கின்றனர். வாசிப்பு, சரளமாக எழுதுதல், பொருள் புரிதல், இலக்கணப் பயன்பாடு போன்ற திறன்களில் பல மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். தமிழின் அடிப்படையே உறுதியாக இல்லாத நிலையில், இலக்கணம், செய்யுள், மனப்பாடப்பகுதிகளை எப்படி மாணவர்களால் சிறப்பாக செய்ய முடியும்.

மேலும், பள்ளிகளில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், நேரத்தையும் தமிழ் பாடத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் மாணவர்களும் தமிழை சரியாகப் படிப்பதில்லை. எனவே, வரும் கல்வியாண்டுகளில் மாணவர்களுக்கு அடிப்படையான மொழித்திறன், சரியான எழுத்துப் பயிற்சி மற்றும் தொடர்ச்சியான வாசிப்பு பழக்கம் ஆகியவற்றை தொடக்கக்கல்வி நிலையிலேயே வலுப்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement