'ஹீட் ஸ்ட்ரோக்' அபாயம் ; மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

12


புதுடில்லி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்; நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தினால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல சிரமங்களும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீரை உடன் எடுத்துச் செல்லுங்கள், உடல் வறண்டு விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி அல்லது கடுமையான சோர்வு போன்ற எந்தவொரு அசவுகரியத்தையும் அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

இந்தக் கொளுத்தும் வெயிலில், விலங்குகளையும் பறவைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. நமது வீட்டு மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே தண்ணீர் நிரப்பிய சிறிய பாத்திரங்களை வைப்பது, தாகத்தால் தவிக்கும் பறவைகளின் வாழ்வாதாரமாக மாறும். இந்த இக்கட்டான நாட்களில், அனைவரும் முழு மனிதாபிமானத்தோடும், இரக்கத்தோடும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement