காங்., கூட்டத்தில் பங்கேற்காத 32 பேரின் பதவிகள் பறிப்பு

பெங்களூரு: காங்கிரசின் எஸ்.ஐ.ஆர்., தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காத மூன்று துணைத்தலைவர்கள் உட்பட, 32 பேரின் பதவி பறிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக விவாதிக்க, பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கடந்த, 25ம் தேதி நடந்தது.

கூட்டமும் நடந்து முடிந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளே, கூட்டத்தில் பங்கேற்காதது, மாநில தலைவரான சிவகுமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து, கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் உத்தரவுப்படி, கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

மே 25ம் தேதி நடந்த எஸ்.ஐ.ஆர்., கூட்டத்தில் பங்கேற்காத மூன்று துணைத் தலைவர்கள், 29 பொது செயலர்கள் என 32 பேர், பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

தாவணகெரே மாவட்ட துணைத்தலைவர் சிவமூர்த்தி, கலபுரகி துணைத்தலைவர் பாபுராவ் ஜாகிர்தார், பெங்களூரு வேணுகோபால்; பொது செயலர்கள் பெலகாவியின் கோடள்ளி; பெங்களூரின் நடிகை பாவனா ராமண்ணா.

பிரபாகர் ரெட்டி, திப்பே கவுடா, ஜுல்பிகர் அகமது, பத்மநாபா; பீதரின் சங்கர் தொட்டி.

சிக்கமகளூரின் ரேகா ஹூலியப்பா; சித்ரதுர்காவின் சண்முகப்பா; மைசூரின் ராமப்பா.

தாவணகெரேயின் வட்னால் ஜெகதீஷ்; தார்வாடின் சண்முகப்பா சிவள்ளி, மல்லிகார்ஜுன் அக்கி; ஹூப்பள்ளியின் சுவாதி மலகி, அல்தாப் நவாஸ் கித்துார்; இஸ்மாயில் டமடகர்; கலபுரகியின் நாகேஸ்வர் ராவ், ரமேஷ் மார்கோல்;

குடகுவின் சந்திரசேகர் பிரசன்னா; கொப்பாலின் ஸ்ரீநாத், மாண்டியாவின் தியாகராஜ்; துமகூரின் நிகேத் ராஜ் மவுரியா, சசிதர்; உத்தர கன்னடாவின் வெங்கடேஷ் ஹெக்டே ஹொசபளே.

பல்லாரியின் கோர்படே; விஜயபுராவின் மக்புல் பகவான்; ஹாவேரியின் பன்னிகோட்; கலபுரகியின் சஞ்சய் ஜாகிர்தார் என 32 பேர், பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன், கட்சி பணிகளில் சரியாக செய்யவில்லை என்ற காரணத்தால், 10க்கும் மேற்பட்டோரின் பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டமும், அடிதடியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement