சட்டசபை இடைத்தேர்தல் உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு

பெங்களூரு: ''சித்தராமையாவை தவிர, வேறு யார் முதல்வரானாலும், அது தற்காலிகம் மட்டுமே. சட்டசபை இடைத்தேர்தல் வந்தே தீரும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இறுதியில் காங்கிரஸ் மேலிடம், கர்நாடக அரசின் தோல்வியை மனதில் கொண்டு, முதல்வரை மாற்ற முடிவு செய்துள்ளது. இது நாட்டில் காங்கிரஸ் அழிவு பாதையில் செல்வதற்கான அடையாளம்.

டில்லியில் நேற்று முன்தினம், ஐந்து மணி நேரம், முக்கியமான ஆலோசனை நடந்துள்ளது. கூட்டத்தின் முடிவில், சித்தராமையாவின் ராஜினாமா முடிவாகியுள்ளது.

சித்தராமையா ராஜினாமா செய்து, வேறு யார் முதல்வரானாலும், அவரால் அவ்வளவு எளிதில் அரசு நடத்த முடியாது. மாநில அரசில் குழப்பம் ஆரம்பமாகும்.

யார் முதல்வராவார் என்பது முக்கியம் அல்ல; அரசின் தோல்வியை காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டது. நாட்டில் இக்கட்சி பலவீனம் அடைந்துள்ளது.

சித்தராமையாவை தவிர, வேறு யார் முதல்வரானாலும், அது தற்காலிகம் மட்டுமே. சட்டசபை இடைத்தேர்தல் வந்தே தீரும். காங்கிரஸ் ஆட்சியை இழக்கும். சித்தராமையா அனுபவம் மிக்க முதல்வர்.

ஆனால் அவரது ஆட்சியில், 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. உட்கட்சி பூசலால், நிர்வாகம் பாதிப்படைந்துள்ளது. வால்மீகி மேம்பாட்டு ஆணையம், முடா உட்பட, பல்வேறு துறைகளில், ஊழல் அதிகரித்துள்ளது.

அரசு அதிகாரிகள், தற்கொலை செய்து கொண்ட ஒரே மாநிலம் கர்நாடகா தான். ஊழலில் மூழ்கிய மாநில அரசை மாற்ற, காங்கிரஸ் மேலிடம் முற்பட்டுள்ளது. இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. எங்கள் கட்சியை பலப்படுத்தி, ஆட்சியில் அமர்த்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement