முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா; காலில் விழுந்து ஆசி பெற்றார் சிவக்குமார்!

12

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில் , துணை முதல்வர் சிவக்குமார் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார் .

கர்நாடகாவில் கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில், 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கு போட்டி எழுந்தது. கட்சி மேலிடத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக சித்தராமையா முதல்வர் ஆனார். சிவகுமார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. ஒப்பந்தப்படி அவர் பதவி விலகுவாரா அல்லது நீடிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது.டில்லி சென்ற சித்தராமையா மற்றும் சிவகுமாரிடம் மேலிட தலைவர்கள், 7 மணி நேரம், ஆலோசனை நடத்தினர். ராகுலுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், முதல்வர் பதவியை விட்டு கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.


அவசர மருத்துவ காரணங்களால் கவர்னர் சொந்த மாநிலமான ம.பி., சென்றிருக்கும் நிலையில், தன் ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் சித்தராமையா ஒப்படைக்க உள்ளார். அதன் பிறகே புதிய முதல்வர் பதவியேற்பு எப்போது என்ற விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. தான் ராஜினாமா செய்ய இருப்பதை முன்னிட்டு, இத்தனை காலமாக தனக்கு ஆதரவளித்த அமைச்சர்களுக்கு தன் இல்லத்தில் காலை விருந்து கொடுத்தார்.


சித்தராமையா. இதில் சிவகுமாரும் பங்கேற்றார். அப்போது சித்தராமையா காலில் விழுந்து வணங்கி சிவக்குமார் ஆசி பெற்றார். அவரை கட்டித்தழுவி தன் ஆதரவை சித்தராமையா தெரிவித்தார். முதல்வர் பதவியை விட்டுத்தருவதை முன்னிட்டு, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, சித்தராமையாவின் ஆதரவாளருக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல, அவரது மகனுக்கும் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement