நெல்லில் மஞ்சள் நிற நோய் தாக்குதல் வேளாண் அதிகாரிகள் ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

சேத்தியாத்தோப்பு: தினமலர் செய்தி எதிரொலியால் மஞ்சள் நிற நோய் தாக்குதலுக்குள்ளான குறுவை சாகுபடி நெல் வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம் வட்டாரங்களில் குறுவை முன்பட்ட நடவு வயல்களில் சோலை மஞ்சள் நிற நோய் தாக்குதல் குறித்து நேற்று படத்துடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடலுார் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அமிர்தராஜ், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன், பேராசிரியர் கமலக்கண்ணன், வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ், புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், கீரப்பாளையம் வட்டார உதவி இயக்குனர் சிவப்பிரியன் ஆகியோர் புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம், ஆணைவாரி பகுதியில் நெற்பயிர்களில் மஞ்சள் நிற நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

குறுவை சாகுபடி வயல்களில் அதிக வெப்பம் காரணமாக நிலத்தில் பாசி படிந்துள்ளதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் செம்பேன் தாக்குதல்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் காரணிகளாக ஊமைட் 1 மில்லி அல்லது ஸ்பைரோமெசிபன் 0.5 மில்லியை தண்ணீர் கரைத்து தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் என விவசாயிகளிடம் வேளாண் அதிகாரிகள் விளக்கமளித்தனர். வேளான் உதவி அலுவலர்கள் வரதராஜன், சந்திரசேகர் உதவி தோட்டக்கலை அலுவலர் கென்னடி உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement