ஆணைக்குன்னம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம்

அச்சிறுபாக்கம்:ஆணைக்குன்னத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாமல் தேக்கமடைந்து உள்ளதால், மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக, 120க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு, அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சியில், கடந்த மாதம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.

இந்த கொள்முதல் நிலையத்தில் இதுவரை 40 கிலோ எடை வீதம், 20,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்த நெல் மூட்டைகள் நெல் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாமல், கொள்முதல் நிலையத்திலேயே மண் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருவதால், 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உள்ளது. மேலும், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் தேவையான தார்ப்பாய்களும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம்.

எனவே, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement