முன்விரோதம் காரணமாக 4 பேரை வெட்டிய இருவர் கைது

புதுச்சேரி: சோம்பட்டில் முன்விரோதம் காரணமாக 4 பேரை கத்தியால் வெட்டிய தந்தை, மகனை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

திருக்கனுார் அடுத்த சோம்பட்டு ஐயனாரப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலு மகன் சதீஷ், 30; தனியார் கம்பெனி ஊழியர். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜி, 25, என்பவரும் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 10ம் தேதி இரவு ராஜி தனது நண்பர்களுடன் சோம்பேட்டில் நின்றிருந்தபோது, அவ்வழியாக வந்த சதீஷை பார்த்து கேலி செய்வது போல் சிரித்தார். கோபமடைந்த சதீஷ், தனது தந்தை பாலுவுடன் சென்று நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் ராஜியிடம் ஏன் என்னை பார்த்து சிரித்தாய் என கேட்டார்.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது தந்தை பாலு ஆகியோர் ராஜி, அவரது அண்ணன் முத்துகுமரன் ஆகியோரை தாக்கினர். சதீஷ் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ராஜி, முத்துக்குமரன், அவரது உறவினர் ராமமூர்த்தி ஆகியோரை வெட்டினார். தடுக்க வந்த சாருஹாசன் என்பவரையும் சரமரியாக முகம் மற்றும் கைகளில் கிழித்துவிட்டு, தப்பிச் சென்றார்.

படுகாயம் அடைந்த முத்துக்குமரன், ராஜி, ராமமூர்த்தி, சாருஹாசன் ஆகியோர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, முன்விரோதம் காரணமாக 4 பேரை கத்தியால் வெட்டிய சதீஷ், அவரது தந்தை பாலு, 60; ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement