பரிதவித்த வடமாநில குடும்பம்; வழிகாட்டிய சிங்கப்பெண் படை

நாகப்பட்டினம்: நாகையில், வேலைக்காக அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட பீஹார் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினரை, 'சிங்கப்பெண் அதிரடிப்படை' போலீசார் மீட்டு, ஊர் திரும்ப ஏற்பாடு செய்தனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணிக்காக, பீஹார் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட எட்டு பேரை, சிலர் அழைத்து வந்துள்ளனர். வேலை முடிந்ததும், அவர்களை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

சொந்த ஊருக்கு செல்வதற்கு கையில் பணமில்லாமல், கால்நடையாக பொரவச்சேரிக்கு வந்தவர்கள், அங்கு சுற்றி திரிந்தனர். இத்தகவல், நாகை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பெண் போலீசார், வட மாநிலத்தவர்களை மீட்டு, எஸ்.பி., அலுவலகம் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின், அவர்களை பீஹார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

Advertisement