கிடப்பில் ஆர்.ஐ., அலுவலக பணி ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமம்

போடி: போடியில் ரூ.35 லட்சம் செலவில் ஆர்.ஐ., அலுவலக கட்டுமான பணி துவங்கி ஓராண்டிற்கு மேலாகியும் முடிவடையாமல் உள்ளன.

போடி ஜே.கே.,பட்டியில் ஆர்.ஐ., அலுவலகம் குடியிருப்புடன் இருந்தது. போடி நகர், மேலச் சொக்கநாதபுரம், குரங்கணி, கொட்டகுடி, டாப் ஸ்டேஷன், வடக்கு மலை, அகமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளடங்கியதாகும்.

இப் பகுதியினர் பட்டா, சிட்டா, அடங்கல், வருமானம், சாதி, இருப்பிடம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட சான்றுகள் பெற போடி ஆர்.ஐ., அலுவலகத்திற்கு வர வேண்டும்.

ஆர்.ஐ., அலுவலகம் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டடம் சேதமடைந்தது.

இதனால் வரை படங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியால் ரூ.35 லட்சம் செலவில் புதிதாக ஆர்.ஐ., அலுவலகம், குடியிருப்புடன் கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கியது.

முன்பக்க கேட் வசதி, வளாக தரை தளம் போன்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள் ளன.

தற்போது திறந்த வெளியாக உள்ளதால் இப்பகுதியை சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட கட்டுமான பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement