மத்திய உள்துறை அமைச்சரிடம் முதல்வர் சிவகுமார் 9 கோரிக்கை

- நமது நிருபர் -:

கர்நாடகாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, போலீஸ் துறையின் திறனை மேம்படுத்த உதவுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முதல்வர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
டில்லியில், நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதல்வர் சிவகுமார் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

கர்நாடகாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, போலீஸ் துறை திறனை மேம்படுத்தவும், இரண்டு கூடுதல் இந்திய ரிசர்வ் பட்டாலியன்களை உருவாக்கவும், போலீஸ் நடவடிக்கைகளுக்கு சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்துவது, போலீஸ் துறை பயிற்சி நிறுவனங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சிறைகளை நவீனமயமாக்குவது போன்ற பணிகளுக்கு உதவ வேண்டும்.

மேலும் கர்நாடக போலீசாருக்கு 'ஜனாதி பதியின் வண்ண விருது' வழங்க வேண்டும் என, 2024 மே 8ம் தேதி சமர்ப்பித்திருந்தோம். இத்தகைய மதிப்புமிக்க கவுரவத்தை இன்னும் பெறவில்லை. இவ்விவகாரத்தை விரைவில் பரிசீலித்து, இந்த விருதை வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

விஜயநகரா, ராம்நகர் மாவட்டங்களில் 243.87 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக இரண்டு ஐ.ஆர்.பி., எனும் இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள் அமைப்பதற்கான புதிய முன்மொழிவு, 2025 பிப்., 4ம் தேதி அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும் .

இது போல ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement