டூவீலரில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீது கார் ஏறி பலி: தப்பியோடிய டிரைவர் கைது

1

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே டூவீலரில் இருந்து தவறி சாலையில் விழுந்த ஒரு வயது குழந்தை மீது பின்னால் வந்த கார் ஏறியதில் உயிரிழந்தது. தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சேக் முகைதீன் 34. தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர். மனைவி நெய்னம்மாள் பீவி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை ரஹீமாவுக்கு ஒரு வயது மூன்று மாதங்கள் ஆகின்றன.

குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சேக் முகைதீன், மனைவி, குழந்தையுடன் டூவீலரில் மேலப்பாளையம் சென்றார். பின்னால் அமர்ந்திருந்த நெய்னம்மாள் பீவி குழந்தையை மடியில் வைத்திருந்தார்.

அவர்கள் அம்பை மெயின் ரோட்டில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே சென்றபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. குழந்தை நழுவி சாலையில் விழுந்தது.

பின்னால் வேகமாக வந்த கார், சாலையில் விழுந்திருந்த குழந்தை மீது ஏறியது. காரை நிறுத்தாமல் டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

காயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர், பொதுமக்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேக் முகைதீன் அளித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். தப்பியோடிய காரை தேடி வந்த போலீசார், அதை ஓட்டியு மேலச்செவலை சேர்ந்த சுந்தர்ராஜ் 27, என்பவரை கைது செய்தனர்.

Advertisement