விதிமீறல் குவாரிகளுக்கு சலுகை; கனிமவளத்துறை விசாரணை

சென்னை: கடந்த ஆட்சி காலத்தில், விதிமீறல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறைக்கப்பட்டது தொடர்பாக, கனிமவளத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில், 3,000 இடங்களில் கருங்கல் வெட்டி எடுக்கும் குவாரிகளும், கிரஷர்களும் செயல்படுகின்றன. இதில், 2,000 குவாரிகள் மட்டுமே, அரசால் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஒவ்வொரு குவாரியிலும் அனுமதிக்கப்பட்டதை விட, எவ்வளவு கருங்கல் அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டது என்பது மதிப்பிடப்பட்டது. கள ஆய்வில் அதிகாரிகள் கொடுத்த மதிப்பீடை அடிப்படையாக வைத்து, குவாரி குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், மேலிடத்தின் தலையீடு போன்ற காரணங்களால், அபராத தொகை குறைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் நடந்த உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இது குறித்து, கனிமவளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குவாரிகளில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அப்போது, எந்தெந்த குவாரிகளுக்கான அபராதம் நிலுவையில் உள்ளது என்பதை விசாரித்தபோது, புதிய தகவல்கள் கிடைத்தன.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 24 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், இந்த குவாரி உரிமையாளர்களுக்கு, 270 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், துறையின் மேலிட ஆதரவை பயன்படுத்தி, இதில் அபராதம், 17 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகிறோம்.

இதேபோன்று, எந்தெந்த குவாரிகளில் அபராதம் விதிப்பதில் முறைகேடுகள் நடந்தன; அதனால் ஏற்பட்ட இழப்பு என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement