ஜாதி, மத அடையாளங்களுடன் கல்வி வளாகத்திற்குள் வர தடை அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

3

சென்னை; ''ஜாதி, மத அடையாளங்களுடன், கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன், கல்வி மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அதில், நடந்து முடிந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கையை, அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

பின், அவர் அளித்த பேட்டி:

கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் திருப்தியாக இருந்தாலும், பின்தங்கிய மாணவர்களையும் அரவணைத்து, முழு இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளோம்.

மாணவர்கள் கூட்டல், கழித்தல், மனப்பாடம் என்று மட்டும் இல்லாமல், நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு குறித்து, மாணவர்களுக்கு விளக்க உள்ளோம். முதல் கட்டமாக, 5,000 பள்ளிகளில் இப்பயிற்சி தொடங்கப்படும்.

பள்ளிகளில் ஜாதி, மத மோதல்களை தடுக்கும் வகையில், ஜாதி, மத அடையாளங்களுடன், கல்வி வளாகத்துக்குள் யாரும் வரக்கூடாது என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாதி, மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், கயிறு கட்டுவது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாதி, மத மோதல்களை தடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு வெளியிட்ட பரிந்துரைகளை, பரிசீலித்து மேம்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?  மாணவர்களுக்கு, டிஜிட்டல் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது  விடுதி வசதியுடன் கூடிய மாதிரிப் பள்ளிகள் மற்றும் விடுதி இல்லாத வெற்றி பள்ளி மாணவர்களுக்கு, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் போட்டித் தேர்வு பயிற்சி அளிப்பது; மாணவர்களின் வாசிப்பு திறன் அடிப்படையில், அரும்பு, மொட்டு, மலர் என வகைப்படுத்தி பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது  ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த, 8.5 லட்சம் முன்னாள் மாணவர் வாயிலாக, தற்போதைய மாணவர்களுக்கு வழி காட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.block_B

Advertisement