காவல் துறையினரிடம் பண மோசடி; இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி 'சஸ்பெண்ட்'

20

சென்னை: போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாகக் கூறி, 20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள, இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பிரபுமணி. இவர், 'விநாயகம் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, குறைந்த விலைக்கு தங்க காசுகள் தரும் திட்டத்தை தொடங்கினார். இதில், ஆண் இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீசாக பணிபுரியும், அவரது மனைவியும் இணைந்தனர்.

இவர்கள் வாயிலாக, கடந்த, 2023ல், செயலி மூலம், போலீசார் மற்றும் அவரின் குடும்பத்தார் முதலீடு செய்தனர். இத்திட்டத்தில், திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஷீலா மேரியும் இணைந்தார்.

இவர் வந்த பின், துணை கமிஷனர் நிலையில் உள்ள, போலீஸ் அதிகாரியும் முதலீடு செய்யும் அளவுக்கு மூளைச்சலவை செய்து வந்தார்.

தற்போது இவர் ராயபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபு மணியும், ஷீலா மேரியும் சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், தங்கக்காசு திட்டத்தில் முதலில் சேர்ந்த ஆண் இன்ஸ்பெக்டர், அவரது மனைவி மற்றும் ஷீலா மேரிக்கு இடையே மோதல் வெடித்தது.

முதலீடு செய்த போலீசாரும், காவல் துறையில் புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால், துணை கமிஷனர் முதலீடு செய்த தொகை, அவரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, ஷீலா மேரி மற்றும் பிரபு மணி ஆகியோர் மீதான புகார்கள், கிடப்பில் போடப்பட்டன.

தற்போது, தங்கக் காசு மோசடி குறித்து, சென்னை மாநகர போலீசாரும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷீலா மேரி, பிரபு மணி ஆகியோர், 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது, விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபு மணியை கைது செய்தனர்.

இவ்வழக்கில் சிக்கிய, ஷீலா மேரியை 'சஸ்பெண்ட்' செய்து, சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் மனோகர்உத்தரவிட்டுள்ளார்.

Advertisement