மெஸ்ஸி உலக சாதனை! ஆஸ்திரியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அதிரடி வெற்றி

​டல்லாஸ்: உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் 'குரூப் - ஜே' பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, இரண்டு கோல்களை அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

​ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகக் கடுமையான பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை எடுத்த கேப்டன் லியோனல் மெஸ்ஸி, எதிர்பாராதவிதமாக கோலாக மாற்றத் தவறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இருப்பினும், ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெடினா கொடுத்த பாஸை மிகத் துல்லியமாகப் பெற்று, ஆஸ்திரியா கோல்கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளினார் மெஸ்ஸி. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது 17-வது கோலைப் பதிவு செய்து, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையை முறியடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்தார். முதல் பாதியில், அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5 நிமிடம்), பந்தை கொண்டு சென்ற மெஸ்ஸி, அங்கிருந்த 4 ஆஸ்திரிய வீரர்களை ஏமாற்றி கோல் அடித்து அசத்தினார். முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என வென்றது. தொடர்ந்து இரு வெற்றி பெற்ற அர்ஜென்டினா, 6 புள்ளியுடன் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.

Advertisement