பனிக்காலம் முடிந்து வசந்த காலம்; வைகோ சூசகம்

25

நமது நிருபர்

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்பபோகிறது என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

நெல்லிக்குப்பம், ம.தி.மு.க.,நகர செயலாளர் ஆதித்யா-ரமா திருமண வரவேற்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

நமது கட்சிக்கான சோதனையான காலம் முடிந்து விட்டது. எங்களுக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தது போன்ற அடிப்படையான பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்.

மேகதாது அணை பிரச்னைக்காக முதலில் போராடியது நாம் தான். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பல கட்சிகளை ஆலை நிர்வாகம் வளைத்தது.

என்னை மட்டுமே நெருங்க முடியவில்லை. மோடி பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்ததால் அந்த கூட்டணியில் இருந்து விலகினோம்.

நமது கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது.தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.அவர்கள் மனதில் காயங்கள் உள்ளன. கடந்த, 9 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். நமக்கு போதுமான சீட் வழங்கவில்லை. தனி சின்னத்தில் போட்டியிட முடியவில்லை. கூட்டணியில் நமக்கு அங்கீகாரம் இல்லை என தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர்.

பனிகாலம் முடிந்தால் வசந்தகாலம் வரும். நமக்கும் பனிகாலம் முடிந்து வசந்தகாலம் வர போகிறது. நாம் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம்.தொண்டர்கள் கவலைபட வேண்டாம்.இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும்.தன்மானத்தையும்,சுயமரியாதையையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

Advertisement