3 மாதங்களாக ஊதியம் இல்லை சமையல் உதவியாளர்கள் தவிப்பு

சென்னை; டாக்டர் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், தமிழகம் முழுதும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், 8,997 சமையல் உதவியாளர்கள், கடந்த மூன்று மாதங்களாக, ஊதியமின்றி தவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், டாக்டர் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், சத்துணவு மையங்களில் பணியாற்ற, 8,997 சமையல் உதவியாளர்கள், தொகுப்பூதிய முறையில் தேர்வு செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் முதல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு பின் 9,000 ரூபாயாக உயர்த்தப்படும் என, சமூக நலத்துறை சார்பில், அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் மூன்று மாதங்களாக, அவர்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், அத்தியாவசிய செலவுகள், குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாமல், ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

அவர்களுடன் பணிபுரியும் சமையலர், அமைப்பாளர்களுக்கு, முறையாக ஊதியம் வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு நிதியில்லை எனக் கூறி, 3,000 தொகுப்பூதியத்தை, அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பது, அவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement