கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; அபராதம், பறிமுதல் தொடர இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், அதிகாரிகளின் கண்காணிப்பு, சோதனைகள் குறைந்துள்ளதால், கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இவற்றை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் அபராதம், பறிமுதல் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், காய்கறி, பழக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் வெளிப்படையாக பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை பயன்படுத்தப்படும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி, பல கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். இதனால், வியாபாரிகள் மாற்று பொருட்களை பயன்படுத்த தொடங்கினர்.

ஆனால், சில மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, மீண்டும் பல கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement