நான் தவெகவில் நாளை இணையப்போகிறேன்; அறிவித்தார் சி.விஜயபாஸ்கர்

33


சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் நாளை (ஜூலை 02) காலை 9 மணிக்கு தவெகவில் இணைகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்தவர், புதுக்கோட்டையை சேர்ந்த விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில், விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் தவெகவில் இணைய போவதாக அறிவித்தார்.

அவரது அறிக்கை: கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய 'கோவிட்' பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான மாபெரும் இணைப்பு விழா நாளை (ஜூலை 02) காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன். இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


பிரத்யேக வீடியோ!

தவெகவுக்கு தாவுகிறார் அதிமுக மாஜி அமைச்சர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்வும்

Advertisement