ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் முதல்வர் விஜய் நாளை முக்கிய ஆலோசனை

5


சென்னை: நாளை (ஜூலை 01) நடக்கவுள்ள த.வெ.க., கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து, முதல்வர் விஜய் முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபையில், 107 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டுள்ள த.வெ.க., தலைமை, காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட, ஏழு தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும், சில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, 15க்கும் மேல் அதிகரிக்கும் என்று, தகவல் வெளியாகியுள்ளது.

இச்சூழலில், த.வெ.க., கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை கோவளத்தில் உள்ள, தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஐந்து நட்சத்திர கடற்கரை விடுதியில் நாளை (ஜூலை 01) நடக்கிறது. இந்த கூட்டத்தில், பட்ஜெட், துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகள் பலமாக உள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து, கூட்டணி கட்சிகளுடன், விஜய் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க., போட்டியிட உள்ளது.

இதற்கு கூட்டணி கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வரும் உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இந்த கூட்டத்தில் விஜய் வலியுறுத்த உள்ளார். இதற்காகவே கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளதாகவும், கூட்டணிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Advertisement