புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி விபரத்தை தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை

சென்னை: 'புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், தங்கள் உற்பத்தி தரவுகளை உடனுக்குடன் மின் வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம்' என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி, இயற்கை சூழலை பொறுத்து மாறுபடும் தன்மை உடையவை. இதனால், மாநில மின் கட்டமைப்பை பாதுகாப்பாகவும், சீராகவும் இயக்க, நிகழ்நேர உற்பத்தி தகவல்கள் மிகவும் அவசியம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதியின்படி, அனைத்து காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களும், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்துடன், 'ஸ்கேடா' எனப்படும் நவீன கணினி தரவு சேகரிப்பு அமைப்பின் வாயிலாக, நிகழ்நேர தரவு தொடர்பு வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த வசதியை ஏற்படுத்தாத மின் உற்பத்தி நிலையங்கள் மீது, பகிர்ந்தளிப்பு மையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தற்போது, காற்றாலை, சூரியசக்தியில், 12,000க்கும் மேற்பட்ட மின் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

இதில், 10 சதவீதத்திற்கும் குறைவான மின் உற்பத்தியாளரே நிகழ்நேர தரவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். மீதமுள்ள, 90 சதவீதம் பேர், பல கட்டங்களாக அறிவுறுத்தியும் தரவுகளை பகிரவில்லை.

எனவே, மின் வாரியம் தரப்பில் இருந்து, மே 30ம் தேதி, 15 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய அறிவிப்பு கடிதம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தென் மாநில மின்சார குழு காலக்கெடுவை நீட்டிக்கவில்லை.

எனவே, அறிவிப்பு பெற்ற, 15 நாட்களுக்குள், உற்பத்தி தொடர்பான நிகழ்நேர தரவுகளை முழுதுமாக வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில், 10 சதவீதம் குறைக்கப்படும். 30 நாட்களுக்கு பின்னும் தகவல்கள் தராமல் இருந்தால், முழு மின் உற்பத்தியும், கணக்கீட்டு முறைகளில் இருந்து விலக்கப்படும்.

மேலும், 45 நாட்களுக்கு பின்பும் ஒருங்கிணைக்கப்படவில்லை எனில் பகிர்ந்தளிப்பு மையம், மேல் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement