போலி சான்றில் குரூப் 1 பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது சரியே!

2


மதுரை: சென்னை கலைவாணி, மதுரை திருநங்கை ஸ்வப்னா, திருநெல்வேலி சதீஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில், குரூப் - -1 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., எங்களை தற்காலிகமாக தேர்வு செய்தது. சிலர், மதுரை காமராஜ் பல்கலையில் போலியாக சான்று பெற்றது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை தொடர்ந்து, எங்களின் தற்காலிக தேர்வை ரத்து செய்து டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டது; அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டனர்.

நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு வழங்கிய பட்டங்களை, இங்கு வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில் பல்கலை ரத்து செய்தது. பல்கலை வழங்கிய தமிழ் வழி கல்வி சான்றுகள் அடிப்படையில் மட்டுமே, மனுதாரர்கள் அதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தற்காலிகமாக பணியில் தேர்வு செய்யப்பட்டனர்.

அதே பல்கலை, அச்சான்றுகள் உண்மையானவை அல்ல என டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவித்தது. இச்சூழலில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை தொடர கோரும் மனுதாரர்களின் தகுதியை மறுபரிசீலனை செய்ததற்காக, டி.என்.பி.எஸ்.சி.,யை குறை கூற முடியாது.

பொது பதவிகளுக்கான நியமனங்கள் சட்டத்தின்படி மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன; மோசடி அல்லது சூழ்ச்சியின் மூலம் அல்ல என்ற மக்களின் நம்பிக்கையில் தான், பொது நிர்வாகத்தின் நியாயம், நம்பகத்தன்மை நிலைத்திருக்கிறது.

நியமனம், நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், தீவிரமான சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், மேல்நடவடிக்கை எடுக்க, ஆதாரங்கள் அதிகாரிகளிடம் இருக்கும் போது, அத்தகைய நியமனங்களை பாதுகாக்கும் வகையில் இந்நீதிமன்றம் அதிகாரத்தை பயன்படுத்தினால், அது தன் அரசியலமைப்பு சார்ந்த கடமையை நிறைவேற்ற தவறியதாகவே அமையும்.

உண்மை தன்மையை தீவிரமான சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள சான்றிதழ்களின் அடிப்படையில் பெறப்பட்ட நியமனத்தை, நீதித்துறை நடைமுறை மூலம் பாதுகாக்கவோ அல்லது தொடரவோ அனுமதிக்க முடியாது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார்.



@block_G@

ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது!

அரசு ஊழியர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயங்களில் விசாரணை நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என, பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கமாக கொண்டுள்ள அரசு, கண்காணிப்பு ஆணையத்தின் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் ஒரு கண்காணிப்பு கமிஷனரை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு அரசும், தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என கூறி வந்தாலும், யதார்த்தம் வேறு விதமாகவே இருந்து வருகிறது.

ஊழல் எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதை அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான, உறுதியான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே ஒழிக்க முடியும். ஊழல் தடுப்பு ஆணையம், லஞ்ச ஒழிப்பு துறையை வலுப்படுத்துவதன் மூலமே அது சாத்தியமாகும். இவ்வாறு உத்தரவிட்டார்.block_G

Advertisement