சங்கராபுரம் பேரூராட்சி வளர்ச்சி  திட்ட பணி கலெக்டர் ஆய்வு   

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பேரூராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். 

சங்கராபுரம் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பத்மஜா நேற்று ஆய்வு செய்தார். சங்கராபுரம் பேரூராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். பின்னர் தியாகராஜபுரம் சாலையில் உள்ள வளமீட்பு பூங்காவினை பார்வையிட்டு, வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தரம் பிரித்து வாங்கும் குப்பைகள் மூலம் தயார் செய்யப்படும் இயற்கை உரங்களை முறையாக விற்பனை செய்யவும் அறிவுறுத்தினார்.  

தொடர்ந்து ஆற்றுப்பாதை தெருவில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் கசடு கழிவு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

Advertisement