சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!

பொதுவாக வீடு, மனை போன்ற சொத்து வாங்குவோர் அதில் எந்தவித வில்லங்கமும் இருக்க கூடாது என்று தான் எதிர்பார்ப்பார்கள். இது விஷயத்தில் எதிர்பார்ப்பு மட்டும் இருந்தால் போதாது, சொத்து தொடர்பான ஆவணங்களில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை உரிய வல்லுனர்கள் வாயிலாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் சொத்து பரிமாற்றம் என்றால், அந்தந்த ஊரில் இருப்பவர்களுக்குள் தான் நடக்கும், எந்த சொத்துக்கு யார் யார் வாரிசு என்பது ஊருக்குள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதாவது ஒரு குடும்பத்தில் வாரிசுகளுக்குள் உரிமையியல் ரீதியாக பிரச்னை இருந்தாலும் அது குறித்து அனைவருக்கும் தெரிந்துவிடும்.

பொது பயன்பாட்டுக்கான பாதை எது, வாய்க்கால் எது, வண்டிப்பாதை எது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் சொத்து விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் பாதுகாப்பு இருந்தது. இதனால், வெளியார் ஆய்வு இன்றி கிராம மக்கள் சொத்து வாங்கினர்.

ஆனால், தற்போது, மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணங்களால், நிலம் தொடர்பான ஆவணங்களில் எது அசல், எது போலி என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், வெளியூரில் இருந்து சொத்து வாங்க வரும் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக சொத்து வாங்குவது என்றால் வங்கிக்கடன் வாயிலாக நிதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் போது, சொத்து பத்திரத்தின் உண்மை தன்மை வழக்கறிஞர் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இதில் வங்கி சார்பில் வழக்கறிஞர் சொத்து பத்திரத்தை ஆய்வு செய்துவிட்டு, ஒப்புதல் கூறிவிட்டார் என்பதால், அனைத்தும் முடிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கின்றனர். உண்மையில், வங்கிக்கு தேவையான விஷயங்களை மட்டுமே அவர் பார்ப்பார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, வீடு, மனை போன்ற சொத்து வாங்குவதாக இருந்தால், குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கொடுத்து அசல் ஆவணங்கள் அல்லது பிரதிகளை வாங்குங்கள். அதை உங்களுக்கு நம்பகமான வழக்கறிஞர் ஒருவரிடம் கொடுத்து ஆய்வு செய்யுங்கள்.

லீகல் ஒப்பீனியன் என்ற அடிப்படையில் இதற்கு வழக்கறிஞர் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிப்பார். அதே நேரம் அந்த சொத்தின் சட்டப்பூர்வ நம்பகத்தன்மை என்ன என்பது குறித்த அறிக்கையை தனது லெட்டர் பேடில் கொடுப்பார்.

இவ்வாறு அதிகாரப்பூர்வமாக லீகல் ஒப்பீனியன் அறிக்கையை வாங்கினால் மட்டுமே, அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வரமுடியும். இதற்கு ஆகும் செலவை பெரிய சுமையாக பார்க்காமல் உங்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கையாக பாருங்கள் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

சொத்து வாங்குவதாக இருந்தால், குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கொடுத்து அசல் ஆவணங்கள் அல்லது பிரதிகளை வாங்குங்கள். அதை உங்களுக்கு நம்பகமான வழக்கறிஞர் ஒருவரிடம் கொடுத்து ஆய்வு செய்யுங்கள்.

Advertisement