விஜய் அரசு மூலம் காங்., கனவு நிறைவேறியது மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி

ஸ்ரீபெரும்புதுார், ஜூலை 4–



‘‘த.வெ.,க., அமைச்சரவையில் காங்., இடம்பெற்றதை அடுத்து, காங்., கட்சியின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது,’’ என, தமிழக காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்.

தமிழக காங்., மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் நேற்று மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசில் காங்., பங்கேற்றுள்ளது. இந்த அரசு நேர்மையான அரசாக செயலாற்ற துவங்கியுள்ளது. அமைச்சரவையில் காங்., இடம்பெற்றதை அடுத்து, காங்., கட்சியின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.

தமிழகத்தில் கட்சி விட்டு கட்சி தாவுவது புதிதல்ல, அனைத்து கட்சிகளிலும் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களை பார்க முடியும்.

குதிரை பேரம் நடப்பதாக எதிர் கட்சியினர் தொடர் குற்றசாட்டு எழுப்பி வந்தனர். தற்போது, த.வெ.க., எம்.எல்.ஏ., ஒருவர் தன்னிடம் பேரம் பேசியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதான் உண்மையான குதிரை பேரம். இதில், ஈடுபட்ட அனைவர் மீதும், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மக்கள் அனைவரும் காவிரியை தாயாக பார்த்து வருகிறோம். நம்முடைய ஜீவாதார பிரச்னையில் எந்த விதத்திலும் தமிழக காங்., சமரசம் செய்து கொள்ளாது. மேகதாது அணை கட்டுவது மிக பெரிய துரோகம்.

மேகதாது அணை கட்ட வேண்டும் என, கர்நாடகாவில் பா.ஜ., காங்., உட்பட அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். தமிழக காங்., தமிழக மக்களின் பக்கம் எப்போதும் துணை நிற்கும். அங்கு ஒரு செங்கலை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

–––––––––––––––––––––––––––––––––––

Advertisement