சிங்கப்பூர் மருத்துவமனையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு 'அட்மிட்'

1

சென்னை: 'சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நேரில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும்' என, அவரது சார்பில், லஞ்ச ஒழிப்பு துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், கரூரில் சாலை போடாமல், 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஒன்பது பேர் உட்பட, 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலு வீடு உட்பட, 20 இடங்களில், கடந்த, 25ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

அதன் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில், நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, வேலுவுக்கு 'சம்மன்' அனுப்பி இருந்தனர்; அவர் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்கப்பூர் மருத்துவமனையில், வேலு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு அதிகரிப்பு மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் இருப்பதால், தொடர்ந்து, 10 நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதனால், வேலு நேரில் ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement