மண்ணின் சுமை தாங்கும் திறன் அறிவதற்கான வழிமுறைகள்!

பு திய வீட்டுக்கான கட்டுமான பணிகளை துவக்கும் முன் அதற்காக நீங்கள் தேர்வு செய்த நிலம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை ஆய்வுகள் உள்ளன. குறிப்பாக, அந்த நிலத்தின் நீளம், அகலம் தொடர்பான விபரங்களை அளந்து, ஆவணத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

இதையடுத்து மேலோட்டமாக பார்க்கும் போது அந்த நிலத்தின் அமைப்பு, குடியிருப்பு கட்டுவதற்கு ஏற்றதாக சமவெளியாக உள்ளதா என்று பாருங்கள். இதற்கு அடுத்த படியாக, அந்த நிலத்தின் மேற்பரப்பில் மண் உலர்ந்த நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.

சில இடங்களில் மேற்புற நிலையிலேயே இயல்பாகன காலத்திலும் மண் ஈரமாக இருப்பதை பார்க்க முடியும். இத்தகைய நிலத்தில் கட்டடத்தை கட்டுவதால் அதன் உறுதி தன்மை தொடர்பாக பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நிலத்தின் மேற்பரப்பு சரியாக இருந்தாலும், அங்கு எத்தகைய கட்டடம் கட்டப்போகிறோம் என்பதை இறுதி செய்வதற்கு முன் மண்ணின் சுமை தாங்கும் திறன் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது தான் மண் பரிசோதனை செய்வார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர்.

சாதாரமாக தரைதளம் வரையிலான கட்டடம் கட்டுவதற்கு மண் பரிசோதனை தேவையா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் மண் பரிசோதனை செய்யாமல் வீடு கட்டும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஒவ்வொரு கட்டடமும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கட்டட அனுமதி பெறும் நிலையில், தொழில்முறை வல்லுநர்கள் சான்று அளிக்கும் போது மண் பரிசோதனை விபரங்களை அதிகாரிகள் கேட்டு பெறுகின்றனர்.

ஆனால், பல இடங்களில் முறையாக மாதிரிகள் எடுத்து மண் பரிசோதனை செய்யாமல், அந்த பகுதியில் பிற நிலங்களுக்கு எடுத்த பரிசோதனை முடிவுகளை மற்றவர்கள் பயன்படுத்து கின்றனர். இவ்வாறு வேறு நிலத்தின் பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தும் போது உண்மை நிலவரத்தை அறிய முடியாத நிலை ஏற்படும்.

உண்மையில் உங்கள் நிலத்தின் சுமை தாங்கும் திறன் என்ன என்பதை நீங்கள் அறிய முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக, நீங்கள் கட்டும் புதிய கட்டடம் சில ஆண்டுகளில் உறுதி தன்மை இழந்து பாதிக்கப்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

எந்த வகை கட்டடம் கட்டுவதாக இருந்தாலும், அதற்கான நிலத்தில் மாதிரிகள் எடுத்து மண் பரிசோதனை செய்வது அவசியம். அப்போது தான் மண்ணின் தன்மை என்ன அதில் உள்ள பாதிப்புகள் என்ன என்பது தெரியவரும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

ஒரே பகுதி என்பதற்காக வேறு நிலத்தின் பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தும் போது, உங்கள் நிலத்தின் உண்மை நிலவரத்தை அறிய முடியாத நிலை ஏற்படும்

Advertisement