நீர்வீழ்ச்சி பாறையில் சிக்கிய நாய்: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

குன்னூர்:குன்னூர் கரன்சி மலை உச்சி, நீர்விழ்ச்சி பாறையில் சிக்கிய, வளர்ப்பு நாயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கரன்சி மலை உச்சியில் நீர்வீழ்ச்சி பாறை பகுதியில் சென்ற வளர்ப்பு நாய் ஒன்று வர முடியாமல் தவித்து கொண்டிருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தட்சிணாமூர்த்தி உத்தரவின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நாய் சிக்கியிருந்த பகுதி செங்குத்தாகவும், சவாலாகவும் இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி அதிரடியாக பாறையில் இறங்கினர்.

நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்பு துறையினர், நாயை எவ்வித காயமுமின்றி பக்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

ஆபத்தான சூழலில் விரைந்து செயல்பட்டு வாயில்லா ஜீவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களின் மனிதநேய செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement