குடகனாற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

1

வேடசந்துார்:குடகனாறு வழி நெடுகிலும் வளர்ந்து நிலத்தடி நீரை பாழாக்கி வரும் சீமை கருவேல மரங்களை பருவமழை துவங்கும் முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குடகு மலையில் உருவாகி ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாறு கரூர் நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. 109 கி.மீ., துாரம் பயணிக்கும் இந்த ஆறு முன்னர் வற்றாத ஜீவநதி போல் ஓடிக்கொண்டிருந்தது.

வேடசந்துார் நகரின் மையப்பகுதியில் ஆற்றில் ஊற்று அமைத்து தண்ணீர் பிடித்ததும், குளித்து மகிழ்ந்ததும் பலருக்கு நினைவு உண்டு. காலப்போக்கில் இந்த ஆற்றில் உள்ள மணல் கட்டட தேவைகளுக்காக தொடர்ந்து அள்ளப்பட்டதால் பாறைகள் நிறைந்து சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாய் மாறிவிட்டது.

ஆடு மாடு மேய்ப்பவர்கள் தவிர வேறு யாரும் ஆற்றின் பக்கம் செல்வது கிடையாது. அந்த அளவிற்கு கருவேல முட்கள் மூடிக்கிடக்கின்றன. முன்பு எல்லாம் இவை விறகுக்காக வெட்டப்பட்டது உண்டு. அந்த காலமும் மாறி தற்போது விறகுக்காக கூட வெட்ட ஆட்கள் இல்லை. இம்மரங்களை அழிக்காமல் விட்டால் போதிய நீராதாரம், நல்ல காற்று, சுகாதாரம் இன்றி பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

எனவே மாவட்ட நிர்வாகம் குடகனாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள அவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பருவமழை துவங்கும் முன் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement