இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்

இஸ்லாமாபாத்:இந்தியா எல்லையைத் திறந்து மனிதாபமான உதவிகள் வழங்கவேண்டும் என பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகவே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மின்சார கட்டணக் குறைப்பு, மானிய விலையில் கோதுமை போன்ற அத்தியாவசிய உள்ளூர் சீர்திருத்தங்களை வலியுறுத்தி தொடங்கிய இந்த போராட்டம், தற்போது பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரும் மாபெரும் அரசியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்க முயன்றதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை மற்றும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் கூட்டு அவாமி அதிரடி குழுவின் தலைவர் சர்தார் அமன் கான், நம் நாட்டுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், தங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ராவலகோட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சர்தார் அமன் கான் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில் அவர் பேசியுள்ளதாவது:

எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இங்கு ரேஷன் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பாகிஸ்தான் அரசு இந்த பிராந்தியத்தின் மீது கடுமையான பொருளாதார முற்றுகையை விதித்துள்ளது.

மக்கள் உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், மக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை திறந்து, மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement