ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி

காஞ்சிபுரம், ஜூலை 7–

‘‘காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலைய கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க அரசிற்கு பரிந்துரை செய்வேன்,’’ என, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதியளித்தார்.

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில், மின்சார ரயில்கள் செல்லும்போது, காஞ்சிபுரம் – வையாவூர் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலைய கடவுப்பாதையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில், எவ்வளவு நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விபரத்தை கேட்டறிந்தார்.

பின், நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலைய கடவுப்பாதையில், ரயில் செல்லும்போது கேட் மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடவுப்பாதை குறுக்கே மேம்பாலம் அமைக்க, அரசிற்கு பரிந்துரை செய்யப்படும்.

காடுகளில் ஏற்படும் தீயை அணைக்க, தண்ணீர் கொண்டு செல்லும் நவீன ட்ரோன்கள் உதவியுடன், தீ அணைக்கும் கருவிகள் வந்துள்ளன.

மனிதர்கள், வன விலங்குகள் மோதலை தடுக்க, மின் வேலிகள், செயற்கைகோள் இணைப்புடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்களை, தமிழகத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம்.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் த.வெ.க.,வில் இணைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறுகிறார். புகார்களை ஆதாரத்துடன் தர வேண்டும். தவறு இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பினருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

இவ்வாறு ரஞ்சித்குமார் கூறினார்.

Advertisement