அரபு நாடுகளிலிருந்து வந்த ஆர்டர்கள்; மீள்கிறது பொள்ளாச்சி தேங்காய் ஏற்றுமதி

3

சென்னை: மேற்காசிய போர் பதற்றங்களால் பொள்ளாச்சியிலிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரபு நாடுகளிலிருந்து தேங்காய் ஏற்றுமதிக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் தேங்காய் ஏற்றுமதியில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி முக்கிய மையமாக செயல்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் விளையும் தேங்காய் மற்றும் கொப்பரையில் 80 சதவீதம் அரபு நாடுகளுக்கு செல்கிறது. தினந்தோறும் 30 டன் தேங்காய் சென்று கொண்டிருந்த நிலையில் போரால் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. போர் பதற்றம் குறைந்த பின் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது சரக்கு போக்குவரத்து கட்டணம் பழைய நிலைக்கு வரவில்லையென்றாலும், ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த வா ரத்திலிருந்து சவுதி அரேபியா, துபாய், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு ஒரு டன் தேங்காய் 65,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 40,000 ரூபாயாக குறைந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement