அனல்மின் நிலைய கட்டுமான பணி 4 வாரங்களுக்கு தடை: தீர்ப்பாயம்

சென்னை: எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை தொடர, நான்கு வாரங்களுக்கு தடை விதித்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் வயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு, தலா 660 மெகாவாட் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் உடைய அனல்மின் நிலையம் அமைய உள்ளது.

இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியாகி விட்டதாக கூறி, இத்திட்டத்துக்கு எதிராக செல்வராஜ் துரைசாமி என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயனா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

எண்ணுார் சிறப்பு அனல்மின் நிலைய கட்டுமான பணிகளுக்கு, 2014 ஜன., 1ல் பெறப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி காலாவதியானதால், புதிதாக அனுமதி பெற வேண்டும் என, மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்துக்கு பெறப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி, 2025 டிச., 31ல் காலாவதியானது. இதை நீட்டிப்பதற்கான வாய்ப்பை, சம்பந்தப்பட்ட தரப்பினர் பயன்படுத்தவில்லை.

உரிய சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால், அனல்மின் நிலையத்துக்கான கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க முடியாது. எனவே, வயலுாரில் நடந்து வரும் கட்டுமான பணிகளை, நான்கு வாரத்துக்கு மேற்கொள்ள கூடாது.

இதையடுத்து, உரிய துறைகளை அணுகி, சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கு, ஆக., 10க்கு ஒத்திவைக்கப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement