'பார்சிலோனா' ஜவுளி கண்காட்சியால் ஸ்பெயினுடன் வர்த்தகம் உயர வாய்ப்பு; ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

திருப்பூர்: 'வரும் அக்., 21ம் தேதி முதல் மூன்று நாள் பார்சிலோனாவில் நடைபெறும் சர்வதேச ஜவுளி கண்காட்சி, இந்திய ஏற்றுமதிக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும்' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல், 10 ஆடை ஏற்றுமதி சந்தைகளில் ஸ்பெயின் நாடு, ஆறாவது இடத்தில் உள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஆடை இறக்குமதியில், சீனா முதலிடத்திலும், வங்கதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மொராக்கோ, கம்போடியா, துருக்கி, பாகிஸ்தான், இத்தாலி, வியட்நாம் நாடுகளுக்கு அடுத்து, ஒன்பதாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்தாண்டு ஸ்பெயின் 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை இறக்குமதி செய்த நிலையில், அதில் இந்தியாவின் பங்களிப்பு, 8,056 கோடி ரூபாயாக, அதாவது 3.70 சதவீதமாக இருந்தது. 2021 முதல் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கான ஆடை ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஏ.இ.பி.சி. அதிகாரிகள் கூறுகையில், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு பின், ஸ்பெயினில் இந்திய ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால், போட்டி நாடுகளின் ஆர்டர்கள் இந்தியாவுக்கு திரும்பி, 2030ம் ஆண்டுக்குள் ஸ்பெயினுக்கான ஆடை ஏற்றுமதி, 16,000 கோடி ரூபாயை எட்டும். 'ஸ்பெயினின் பார்சிலோனாவில்' வரும் அக்., 21 முதல் மூன்று நாள் நடைபெறும் சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள், 30ம் தேதிக்குள் www.aepcindia.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

@block_B@ ஸ்பெயினுக்குஇந்திய ஆடை ஏற்றுமதி 2021 - ரூ.4,569 கோடி 2022 - ரூ.5,819 கோடி 2023 - ரூ.5,839 கோடி 2024 - ரூ.5,862 கோடி 2025 - ரூ.8,056 கோடிblock_B

Advertisement