முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

23


சென்னை: சாலை அமைக்காமல் ரூ.3.23 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஒன்பது பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலு வீடு உட்பட, 20 இடங்களில் கடந்த ஜூன் 25ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க கடந்த 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு எவ வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம் ஆஜராகாத அவர், உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், நேரில் ஆஜராவதில் இருந்த விலக்கு அளிக்கக் கோரியிருந்தார். இதையடுத்து, எவ வேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்திருந்தது.

இதனிடையே, தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வரும் 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீஸ்க்கு நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், வழக்கை ரத்து செய்யக்கோரும் எ.வ.வேலுவின் மனுவுக்கு ஜூலை 27ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Advertisement