'தனி பஸ் விடுங்க விஜய் மாமா' : முதல்வருக்கு மாணவர் கடிதம்

துாத்துக்குடி: 'பள்ளி செல்ல எங்களுக்கு தனியாக பஸ் இயக்க வேண்டும்' என, முதல்வருக்கு, 'விஜய் மாமா' என குறிப்பிட்டு, மாணவர் எழுதியுள்ள கடிதம் பரவி வருகிறது.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் செயல்பட்டு வரும் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

அந்த பகுதியில் அமைந்துள்ள செந்தில் முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சுற்று வட்டார கிராமத்திலிருந்து , ஏராளமான மாணவியர் பயின்று வருகின்றனர்.

தினமும், பஸ்களில் கூட்ட நெரிசலில் தவித்து வருகின்றனர். சமீபத்தில் படிக்கட்டில் தொங்கிபடி பயணம் செய்த மாணவர் ஒருவர், கீழே விழுந்து காயமடைந்தார்.

இந்நிலையில், முதல்வருக்கு, 9ம் வகுப்பு மாணவர் அசோக் என்பவர் கைப்பட எழுதி அனுப்பியுள்ள கடிதம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த கடிதத்தில், 'என்னை போன்ற மாணவர்கள் பலர் தினமும் பள்ளி செல்ல, 20 கி.மீ., பயணம் செய்து வருகிறோம். காலை 8:00 மணிக்கு பஸ் ஏறினால், 9:00 மணிக்கு தான் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.

மாலை 4:00 மணிக்கு பள்ளி முடிந்து புறப்பட்டால், 5:00 மணிக்கு மேல் தான் வீடு திரும்புகிறோம். பள்ளி மாணவ - மாணவியருக்கு, விஜய் மாமா, தனியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில், 40 மாணவ - மாணவியர் கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisement