கடன் செயலி உருவாக்கி ரூ.200 கோடி மோசடி; மென்பொறியாளர் கைது

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து, 'மஸ்த் மணி' என்ற ஆன்லைன் கடன் செயலி நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் இருவர் புகார் அளித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில், மத்திய பிரதேசம், போபாலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கமில் சித்திக் என்பவர், அந்த செயலியை உருவாக்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, போபாலில் இருந்த கமில் சித்திக்கை, நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: எந்த பிணையுமின்றி 15,000 ரூபாய் வரை உடனடி கடன் வழங்கப்படும் என மஸ்த் மணி செயலி சார்பில், சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், பயனர்களின் தகவல்கள் மற்றும் தொடர்பு எண்கள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்கு சென்றன.

இதையடுத்து, 15,000 ரூபாய் கடனுக்கு அதிக வட்டி சேர்த்து, 25,000 முதல் 50,000 ரூபாய் வரை திருப்பிச் செலுத்தும்படி மிரட்டியுள்ளனர்.

பணம் செலுத்தாதவர்களின் தனிப்பட்ட தகவல்களை, தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். இதற்கு பயந்து பலர் கேட்கும் பணத்தை கட்டியுள்ளனர். இவ்வாறு நாடு முழுதும், ஐந்து லட்சம் பேரிடம், 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

@block_B@ 60 சைபர் குற்றவாளிகள் கைது உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், ஆன்லைன் விளையாட்டு, திருமண இணையதளம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு மாற்றி வழங்குவது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு, 50 கோடி ரூபாய் வரை சைபர் குற்றவாளிகள் சுருட்டினர். இது தொடர்பாக, 100 இடங்களில் போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்குரிய 60 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.block_B

Advertisement