வேளாண் பல்கலை விடுதியில் மாணவி மர்ம மரணம்

வடவள்ளி: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாரணிகா, 18 கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை பல்கலை விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

பணியாளர்கள், மாணவிகள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, அவர் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு முதலில் தனியார் மருத்துவமனைக்கு ம், பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். மாணவியின் உறவினர்கள் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் குழுமினர். மாணவி உயிரிழப்புக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவியின் தந்தை கார்த்தி கூறுகையில், ''காலை 7 மணிக்கு குளியலறைக்கு சென்ற என் மகளை மதியம் 12 மணி வரை யாரும் பார்க்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. மகளுக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்,'' என்றார்.

பல்கலை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'மாணவி ஏற்கனவே பல்கலை மருத்துவமனையில் குறைந்த ரத்த அழுத்த பிரச்னைக்காக சிகிச்சை பெற்றிருந்தார். இதற்காக சொந்த ஊருக்கும் சென்று வந்திருந்தார். திரும்பி வந்த பிறகும் இரண்டு நாட்கள் வகுப்புகளுக்கு செல்லவில்லை' என்றனர்.

Advertisement