டிரைலர் லாரியில் பைக் மோதி வாலிபர் பலி; நண்பர் ‘சீரியஸ்’

சென்னை: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரைலர் லாரியில் பைக் மோதி, சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியானார். பலத்த காயமடைந்த அவரது நண்பர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவொற்றியூர், கலைஞர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் திவாகர், 25. இவர், சவுதி அரேபியா நாட்டில் வெல்டிங் வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பியவர், தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திருவொற்றியூர், சக்தி கணபதி நகரைச் சேர்ந்த நண்பர் ராஜ்குமாரை அழைத்துக் கொண்டு, ‘கே.டி.எம்., டியூக் – 250’ ரக பைக்கில் மணலி விரைவு சாலையில், சத்தியமூர்த்தி நகர் – ஜோதி நகர் நோக்கி சென்றார்.

வி.பி., நகர் அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரைலர் லாரியில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கை ஓட்டிய திவாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜ்குமாரை, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திவாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருளான பகுதியில், எந்த எச்சரிக்கை சமிக்ஞையும் இன்றி சாலையோரம் டிரைலர் லாரியை நிறுத்தியிருந்த அதன் ஓட்டுநரான, விழுப்புரத்தைச் சேர்ந்த அஜித், 38, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement