துர்நாற்றத்தில் திருப்புவனம் தாலுகா அலுவலகம்
திருப்புவனம்:திருப்புவனம் தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர்.
திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவு, சமூக பாதுகாப்பு திட்டம், இ சேவை மையம், ஆதார் சேவை மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளை சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்காக தினசரி தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகம் பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் அப்படியே உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வளாகத்தினுள் நிற்கக் கூட முடிவதில்லை. துர்நாற்றம் குறித்து தாசில்தாரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.