ஜவுளி தொழிலில் முதலீடு ஈர்க்க தமிழக அரசு பேச்சு 

சென்னை: தமிழகத்தில் ஜவுளி துறையில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்களுக்கு, தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய ஜவுளி துறை சார்பில் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், 'பாரத்டெக்ஸ்' என்ற உலகின் ஒருங்கிணைந்த ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நாளை நிறைவடைகிறது.

இம்மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிக்கை: உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடை தொழில் முதலீடுகளுக்கான முதல் தேர்வாக தமிழகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்த மேடையில் மீண்டும் வெளிப்படுத்தினோம். நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய, சிறந்த வணிக சூழலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement