லஞ்ச ஊழல் புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

25

சென்னை: சென்னை மாநகராட்சியில் தீவிர ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சோதனைகளைத் தொடர்ந்து, முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 4 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், நான்கு பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன. டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு மற்றும் லஞ்ச புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யார் மீது நடவடிக்கை

* 2025-2026ம் ஆண்டில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்குப் போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் தேவிகலா, உள்விசாரணைக்குப் பிறகு ஜூலை 9ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* ஷெனாய் நகரில் உள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணியாற்றும் சிவ பொற்கொடி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இளைஞரிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றதற்காக ஜூலை 11ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாதவரம் மண்டல உதவிச் செயல் பொறியாளர் ஆனந்தராவ்
ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து பில் கணக்கு முடித்து பணம் பெற்று தருவதற்கு லஞ்சம் கேட்டதற்காக, NULM பணியாளரான கண்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நான்கு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான உள்விசாரணை துவங்கியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது: எந்தவொரு அதிகாரியும், லஞ்சமோ அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத ஆதாயங்களையோ கோரினால், அது குறித்து நேரடியாக என் கவனத்திற்குக் கொண்டு வரலாம்.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன். ஊழல் விவகாரத்தில் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்குமாறு முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார், என்றார்.


பிரத்யேக வீடியோ!

அதிரடி ஆக்ஷனில் தமிழக அரசு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement