வனப்பகுதியில் குப்பை கழிவுகள் விலங்குகளுக்கு நோய் அபாயம்

மறைமலை நகர்: கூடலுார் வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் வனவிலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலுார் பகுதியில் 2,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

கூடலுார் -- கோவிந்தாபுரம் இடையே  2 கி,மீ., துாரம் ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையை கோவிந்தாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலை நகர் வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மருதேரி- - சிங்கபெருமாள் கோவிலை இணைக்கும் பிரதான சாலையாகவும் உள்ளது.

கூடலுார் ஏரிக்கரை சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால், உணவு தேடி வரும் வனவிலங்குகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக தொழிற்சாலைகழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன.

எனவே, குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement