உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
மாட்ரிட்: கால்பந்து உலக சாம்பியன் ஸ்பெயினை வரவேற்க, 20 லட்சம் பேர் திரண்டனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. இதையடுத்து 26 வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வந்தனர்.
உலக கோப்பையுடன் மன்னர் குடும்பத்தினர், பிரதமர் பெட்ரோ சான்செசையும் சந்தித்து பாராட்டு பெற்றனர். பின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மான்க்லோவா அரண்மனையில் இருந்து சிபெலெஸ் சதுக்கம் வரை திறந்த வெளி பஸ்சில் ஏறி, மாட்ரிட் நகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.
'வி ஆர் சாம்பியன்' என்ற வாசகம் கொண்ட ஜெர்சி அணிந்து காணப்பட்டனர். பல்வேறு இடங்களில் வீரர்கள், ரசிகர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
சிபெலெஸ் சதுக்கத்தில் ஸ்பெஷலான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்ததும் ஒவ்வொரு வீரராக அறிமுகம் செய்யப்பட்டனர். தனது 25 வது பிறந்த நாள் கொண்டாடிய பயனா, உலக கோப்பை ஏந்திய படி வந்தார். கடைசியில் பயிற்சியாளர் லுாயிஸ் டி லாவை வீரர்கள் மேலே துாக்கி ஆரவாரம் செய்தனர்.
பின் ஆட்டம் களை கட்டியது. வீரர்களுடன் பாடகிகள் ஐடனா, அனா மெனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.