புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு
புதுச்சேரி: போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பல்கலை கழக மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசிய சேவைத் திட்டம் மற்றும் அகில இந்திய நஷா முக்த் பாரத் அபியான் இயக்கம் சார்பில், யுவா கனெக்ட் என்ற தலைப்பில் போதை தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அலுவலர் ராஜி நோக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர் ஆதித்திய குமார் சிங், மாணவர்கள் ஒழுக்கம், நீதி, தெளிவான இலக்குகளை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறை குறித்து கலந்துரையாடி விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்த, பல்கலைக் கழகத் துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேசும்போது, வளர்ந்த இந்தியா எனும் உன்னத இலக்கை அடைவது நாட்டின் இளைஞர்களின் ஆற்றலிலும் அவர்களின் பொறுப்புணர்விலும் தான் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில், பேராசிரியர் நளினி, டாக்டர் இப்திகார் ஆலம் ஆகியோர் போதைப்பொருள் பயன்பாட்டால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் பாதிப்புகள், சமூக-பொருளாதார ரீதியிலான விளைவுகள் குறித்து விவரித்தனர்.
தொடர்ந்து, ஹார்ட்புல்னஸ் தியான மையம் அமைப்பைச் சேர்ந்த தியான்டோஷ் திருவரசன், மாணவர்களின் மன அமைதிக்காகவும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் சிறப்புத் தியானப் பயிற்சியை நடத்தினார்.
தியான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பல்கலை மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர். தேசிய சேவை திட்ட தன்னார்வலர் பாத்திமா ரிஷ்பா நன்றி கூறினார்.